NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கென்யாவில் இறைவனை காண்பதற்காக பட்டினி சாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90ஆக உயர்வு!

கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிறிய கடற்கரை நகரமான மாலிண்டி எனும் பகுதியில் இறைவனை காண்பதற்காக பட்டினி கிடந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரமான மாலிண்டி நகரில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ என்கிற தேவாலயம் உள்ளது. இதன் தலைமை பாதிரியாராக விளங்கும் பால் மெக்கன்சி என்பவர் இறைவனை காண வழியை காண்பிப்பதாகக்கூறி, பொதுமக்களை மூளை சலவை செய்துள்ளார்.

இந்நிலையில், இவரது தவறான போதனைகளுக்கு அடிமையான மக்கள் இறைவனை காண்பதற்காக பட்டினி கிடந்து உயிர் துறக்க தயாராகியுள்ளனர்.

குறித்த பாதிரியாருக்கு சொந்தமான பண்ணையில் சிலர் உடல் மெலிந்த நிலையில் மோசமான நிலையில் இருப்பதாக கடந்த வாரம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

பண்ணையில் நடத்திய சோதனையில் அங்கு 4 பேர் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். இது குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது, பாதிரியார் பால் மெக்கன்சி தன்னைப் பின்பற்றும் மக்களிடம் உண்ணாவிரதம் இருந்தால் யேசுவை காணலாம் என போதித்ததாகவும், அதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதைதொடர்ந்து பாதிரியார் பால் மெக்கன்சியை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த பலரது உடலை அவர் தனது பண்ணையில் மொத்தமாக புதைத்துள்ளார் என்பது தெரியவந்தது.

அதனையடுத்து, அந்த பண்ணையில் சோதனையை தீவிரப்படுத்திய நிலையில் அங்கு தோண்டதோண்ட சடலங்கள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் பண்ணையில் இருந்து இதுவரை 90 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குவர் கூறுகின்றனர்.

இதுகுறித்து அந்நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கிதுரே கிண்டிகி கருத்து தெரிவிக்கையில், ‘800 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை முழுவதும் பொலிஸாரின் கண்காணிப்பில் உள்ளது. பண்ணையின் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உண்ணாவிரதம் மேற்கொண்ட சிலர், பொலிஸாரின் தேடுல் நடவடிக்கைகளுக்கு பயந்து அருகில் உள்ள காட்டுப்பகுதியில் புதருக்குள் மறைந்துள்ளதாகவும், அவர்களை மீட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் நிலையில், அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிட மறுப்பதாகவும், முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொள்ள மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

மாலிண்டி நகரில் 213 பேரை காணவில்லை என கென்யா செங்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவர்களை அவர்களை தேடும் பணிகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles