NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பந்தியில் இனிப்பு பரிமாறாததால் நிறுத்தப்பட்ட திருமணம்!

இந்தியா – கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமத்தில் வசிக்கும் இருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று (06) நடைபெற இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் (05) சோமவார்பேட்டை டவுனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக மணமகன் வீட்டார் அந்த திருமண மண்டபத்திற்கு வந்தனர். மணமக்கள் மேடையில் இருந்த நிலையில், விருந்து நடைபெறும் இடத்தில் திடீரென தகராறு ஏற்பட்டது. திருமண விருந்தில் சம்பிரதாயப்படி முதலில் சாப்பாட்டு இலையில் இனிப்பு வழங்காமல் நிராகரித்து விட்டதாகவும், அதனால் தங்களது சம்பிரதாயம் அவமதிக்கப்பட்டதாகவும் கூறி மணமகன் வீட்டார் தகராறில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பெண் வீட்டாரும், பதிலுக்கு தகராறில் ஈடுபட்டனர். இதனால் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் மணமகன் வீட்டார் இந்த திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டனர். பெண் வீட்டைச் சேர்ந்த ஒருதரப்பினர் மணமகன் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விடிய, விடிய நடந்த பேச்சுவார்த்தையில் முகூர்த்த நேரம் நெருங்கியதும் பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட தயார் என்று மணமகன் தெரிவித்தார்.

அதுவரை பொறுமையாக இருந்து நடந்தவற்றை கவனித்து வந்த மணமகள், திடீரென திருமணத்திற்கு முன்பே ஒரு சிறிய விஷயத்துக்காக இவ்வளவு பிரச்சினை என்றால், திருமணத்திற்கு பின்பு தன்னால் நிம்மதியாக வாழ முடியாது என்று கூறிய மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

Share:

Related Articles