NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மருத்துவ கழிவுகளை அகற்றும் எரியூட்டியை கோம்பயன்மணல் மயானத்தில் நிறுவ தீர்மானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டியை கோம்பயன்மணல் மயானத்தில் நிறுவுவதற்கு ஒருங்கிணைப்புகுழுவில் நேற்று (01) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி நிறுவுவதற்கு யு.என்.டி.பி நிறுவனம் நிதி உதவி வழங்கியிருந்தது.

ஏனினும், எரியூட்டி அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதில் நீண்ட இழுபறி நிலவிய நிலையில், ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள் எதிர்ப்புக்கள் தெரிவித்தமையால் இடத்தெரிவில் காலதாமதம் ஏற்பட்டது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்ட போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி பங்கேற்று சில விளக்கங்களை வழங்கினார்.

‘மருத்துவக் கழிவுகள் (என்பதில் உடலின் சில பாகங்கள், குருதி, சிறுநீர் போன்றவைதான் இருக்கும். முழுமையான உடலை தகனம் செய்கின்றார்கள். அதில் சில கழிவுகள் எஞ்சும். ஆனால் மருத்துவக் கழிவுகளை எரியூட்டிகள் ஊடாக தகனம் செய்யும்போது எவையும் மிஞ்சாது.

சூழலுக்கு எரியூட்டி ஊடாக புகை செல்வதே தெரியாது. எரியூட்டியில் முதலில் 650 டிகிரியில் மருத்துவக் கழிவுகள் தகனம் செய்யப்படும். பின்னர் 800 தொடக்கம் ஆயிரம் செல்சியஸ் வெப்பத்தில் அவை இரண்டாவதாக தகனம் செய்யப்படும். இதனால் சூழல் பாதிப்பு ஏற்படாது. இதை மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்குத் தெளிவூட்டவேண்டும். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் சிறிய எரியூட்டி உள்ளது. எதிர்காலத்தில் அதுவும் இயக்கப்படும்’ என விளக்கமளித்தார்.

இதனை தொடர்ந்து, ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தலைமையில் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

Share:

Related Articles