NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலையகத்தில் பிரமாண்டமானமுறையில் தேசிய பொங்கல் விழா…!

மலையகத்தில் முதன்முறையாக மிக பிரம்மாண்டமான முறையில் தேசிய தைப்பொங்கல் விழா இம்முறை கொண்டாடப்படவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் நாளை (21) நடைபெறும் தேசிய தைப்பொங்கல் விழா, 1008 பொங்கல் பானை வைக்கப்பட்டு, தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடன் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

மேலும் , கோலப்போட்டி, சிலம்பாட்டம் உட்பட பாரம்பரிய போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் நடைபெறும் விழாவில் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளதுடன், வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், மக்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தென்னிந்தியாவில் இருந்து கலைஞர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மலையக மண்ணில் இம்முறையே 1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, மிகவும் பிரம்மாண்டமான முறையில் தேசிய பொங்கல் விழா நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles