NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மிஸ் பிரேஸில் அழகிப் போட்டி – மனைவிக்கு முதலிடம் கிடைக்காதமையால் வெற்றியாளரின் கிரீடத்தை உடைத்த கணவர்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பிரேஸில் நாட்டில் மிஸ் பிரேஸில் அழகி போட்டியின் இறுதி போட்டி நடைபெற்ற போது, முதலாம் இடம் பிடித்தவரின் கிரீடத்தை 2ஆம் இடம் பிடித்தவரின்; கணவர் தரையில் அடித்து உடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பல்வேறு கட்டங்களாக நடந்த தேர்வுகளின் அடிப்படையில் நதாலி பெக்கர் மற்றும் எமானுவெலி பெலினி ஆகிய இருவர்; போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து வெற்றியாளரை அறிவிப்பதற்காக 2 பேரும் மேடை ஏற்றப்பட்ட போது, போட்டியில் பெலினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது.

அப்போது போட்டியில் 2ஆம் இடம்பிடித்த நதாலியின் கணவர் திடீரென மேடை ஏறி, பெலினிக்கு சூட்டப்பட்ட கிரீடத்தை பறித்து தரையில் வீசி உடைத்தார். இதனால் கிரீடம் துண்டுத்துண்டாக உடைந்தது.

இதைப்பார்த்த நடுவர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள்; ஓடி வந்து அவரை மேடையில் இருந்து கீழே இறக்கினர்.

அப்போது நதாலியின் கணவர் கூறுகையில், நடுவர்கள் சரியான தீர்ப்பை வழங்கவில்லை. எனவே தான் ஆத்திரத்தில் இவ்வாறு செய்தேன் என்றார். ஆனால் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தான் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை பார்வையாளர் ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Share:

Related Articles