NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

120 விசேட வைத்தியர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்தியர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் பணிக்கு திரும்பாத விசேட வைத்தியர்கள் குழுவொன்று கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கறுப்புப் பட்டியலில் உள்ள மருத்துவர்கள் நாடு திரும்ப முடியும் என்றாலும், மருத்துவ சிகிச்சைக்காக பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் முறையீடு செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது.

மேலும், 2022 ஜனவரி 09 மற்றும் 2023 ஆகஸ்ட் 18க்கு இடையில் 363 வைத்தியர்கள் வெளிநாடுகளில் பயிற்சிப்பெற்று இலங்கைக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 120 வைத்தியர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளதுடன் இலங்கையில் இருக்க வேண்டிய 29 மயக்க மருந்து நிபுணர்களில் 12 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, கரவனெல்ல, தெஹியத்தகண்டிய, மஹாஓயா மற்றும் கல்முனை பிரதேசத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் மயக்க மருந்து நிபுணர்கள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

12 மாத காலப்பகுதியில் 842 சிரேஷ்ட வைத்திய அதிகாரிகளும் 274 விசேட வைத்தியர்களும் 23 அவசர சிகிச்சை நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்கு அரசு உடனடியாக உரிய தீர்வைக் கொடுக்காவிட்டால் சுகாதாரத் துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles