தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில் இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ளன.
இந்தநிலையில், வழமைக்கு மாறாக இம்முறை காலி முகத்திடலில் அன்றி சுதந்திர சதுக்கத்தில் இந்நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
நாளை நண்பகல் 12 மணிக்கு கடற்படையினரால் சம்பிரதாய பூர்வமாக 25 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்படுவதோடு, பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்தோடு, விசேட போக்கவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதோடு, மக்களுக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களைக் குறைக்கும் வகையில் ஒத்திகைகளும், பிரதான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்போது பாதுகாப்பு படையினர் 4421 பேர் மரியாதை அணி வகுப்புக்களில் பங்கேற்கவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுதந்திர தின நிகழ்வின் பங்கேற்கும் படை வீரர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதோடு, கடந்த ஆண்டு 6745 வீரர்கள் மரியாதை அணிவகுப்புக்களில் பங்கேற்றிருந்த நிலையில், இம்முறை அந்த எண்ணிக்கை 4421 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறை எவ்வித வாகன அணிவகுப்பும் இடம்பெறாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய கொடியை ஏந்திச் செல்வதற்காக விமானப்படையின் 3 உலங்கு வானூர்திகள் மாத்திரமே பயன்படுத்தப்படும் எனவும், கடந்த ஆண்டு 19 உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டிருந்ததோடு, இம்முறை எவ்வித வாகன அணிவகுப்பும் இடம்பெறாது எனவும், முப்படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பு மாத்திரமே இடம்பெறவுள்ளதாகவும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.