NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளர் கொலை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளரான சம்பத் கமகேவின் வீட்டிற்குள் சென்ற இனந்தெரியாத நபரொருவர் அவரை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகம பனாகொட சமகி மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விசாரணையின் போது, கொலை செய்யப்பட்டவரின் தகாத உறவு குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹோமாகம பனாகொட சமகி மாவத்தைக்கு முச்சக்கரவண்டியில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளரான சம்பத் கமகேவை பொல்லால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்தவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles